search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி முருகன்"

    பழனி முருகன் கோவிலில் நடந்த விஜயதசமி விழாவையொட்டி, வன்னிகாசூரனை தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்துக்குமாரசுவாமி வதம் செய்தார்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது. விழாவின் இறுதி நாளான நேற்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 9 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் பத்ரகாளியம்மன் கோவில் மண்டபத்தில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், 6 கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் ஆகியவை நடந்தது.

    பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை, பத்ரகாளியம்மனுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக மலைக்கோவிலில் காலை 5.50 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், விளா பூஜை, சிறுகால சந்தி, கால சந்தி, உச்சிகால பூஜை, சாயரட்சை பூஜை நடந்தது.

    மதியம் 3 மணிக்கு மூலவரிடம் வில்-அம்பு, கத்தி, கேடயம், குத்தீட்டி, சக்திவேல் ஆகியவற்றை பெறும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சன்னதி வலம் வந்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது. அதன் பின்னர் மலைக்கோவில் நடை அடைக்கப்பட்டது.

    இதனையடுத்து பாரவேல் மண்டபத்தில் வில்-அம்பு உள்ளிட்ட அயுதங்களை புலிப்பாணி பாத்திரசுவாமிகளிடம் வழங்கும் நிகழ்ச்சியும், மூலவர் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலை வந்தடையும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து முத்துக்குமார சுவாமி, தங்கக்குதிரை வாகனத்தில் எழுத்தருளி சக்திவேல் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்கிடையே வன்னிகாசூரனை வதம் செய்வதற்காக லட்சுமிநாராயண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து முத்துக்குமார சுவாமி, கருட வாகனத்தில் லட்சுமிநாராயண பெருமாள், புலிப்பாணி பாத்திரசுவாமிகள் ஆகியோர் கோதைமங்களம் கோதை ஈஸ்வரர் கோவிலுக்கு இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோதைமங்களம் கோதை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, கோவில் எதிரே அமைக் கப்பட்டிருந்த மேடையில் வன்னி, வாழை மரங்களாக மாறி நின்ற வன்னிகாசூரனை வில்-அம்பு கொண்டு முருகப்பெருமானின் பிரதிநிதியாக புலிப்பாணி பாத்திரசுவாமி வதம் செய்தார். இதைத்தொடர்ந்து வில்-அம்பு உள்ளிட்ட அயுதங்கள் முத்துக்குமாரசுவாமி முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் பெரியநாயகி அம்மன் கோவிலில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து அவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சக்திவேல் மலைக்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, சம்ரோட்சனை பூஜைக்கு பின்பு இரவு 11 மணிக்கு மேல் ராக்கால பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    நவராத்திரி, விஜயதசமி விழாவையொட்டி சிறப்பு பூஜைகளை பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணிய குருக்கள், சுந்திரமூர்த்திசிவம் ஆகியோர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அதிகாரிகள் செய்திருந்தனர்.

    நவராத்திரி விழாவையொட்டி கடந்த 9-ந் தேதி முதல் தங்கரத புறப்பாடு நடைபெறவில்லை. நேற்றோடு நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று (சனிக்கிழமை) முதல் மீண்டும் இரவு 7 மணிக்கு மேல் தங்கரத புறப்பாடு நடைபெறும் என பழனி முருகன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
    பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவில், திருஆவினன்குடி கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, காலசந்தி பூஜை நடந்தன. இதையடுத்து சிவன், நடராஜர், சிவகாமி அம்மன், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், முத்துகுமாரசுவாமி வள்ளி-தெய்வானை மற்றும் கோவில் யானை கஸ்தூரிக்கும் காப்புக்கட்டு நிகழ்ச்சி நடந்தது.

    இதைத் தொடர்ந்து உச்சிகால பூஜையில் திருஆவினன்குடி கோவிலிலும், மலைக்கோவிலிலும் விநாயகர், மூலவர், சின்னக்குமாரர், சண்முகர், வள்ளி தெய்வானை, துவாரபாலகர்கள் ஆகியோருக்கு காப்புக்கட்டு நடைபெற்றது. காப்பு கட்டு நிகழ்ச்சியை கோவில் பட்டத்துகுருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணிய குருக்கள் உள்ளிட்ட குருக்கள் செய்தனர்.

    நவராத்திரி விழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் நேற்று முதல் வருகிற 19-ந்தேதி வரை 11 நாட்கள் சுவாமி புறப்பாடு நடைபெறாது . மேலும் வருகிற 19-ந்தேதி விஜயதசமி விழாவில் மலைக்கோவிலில் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், 3.05 மணிக்கு பராசக்திவேல் புறப்பாடும், உடன் சன்னதி அடைக்கப்படும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

    இதையடுத்து பராசக்திவேல் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவில் வந்து சேர்கிறது. பின்னர் அங்கிருந்து தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி பராசக்திவேலுடன் சென்று கோதைமங்கலம் கோதை ஈஸ்வரர் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பராசக்திவேல் மலைக்கோவில் வந்து சேரும். இரவு 10 மணிக்கு சம்ரோட்சண பூஜையும், பின்னர் ராக்கால பூஜையும் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர். 
    மோசடி புகார் எதிரொலியாக, பழனி முருகன் கோவிலில் இருந்து ஐம்பொன் சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. #Idolsmuggling
    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்குள்ள நவபாஷாணத்தால் ஆன மூலவர் சிலை, போகர் என்னும் சித்தரால் செய்யப்பட்டதாகும். தினமும் அபிஷேகம் செய்வதால், இந்த சிலை சேதம் அடைவதாக கூறி ஐம்பொன்னால் ஆன புதிய சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன்பிறகு 6 மாத காலத்தில் அந்த சிலை அகற்றப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்தநிலையில் ஐம்பொன் சிலை செய்ததில் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு ஸ்பதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா, உதவி ஆணையர் புகழேந்தி, சென்னை அறநிலையத்துறை சென்னை தலைமையிட நகைமதிப்பீட்டு அதிகாரி தேவேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் இந்த மோசடி தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் வழக்கு விசாரணை முடியும் வரை கோவில் நிர்வாகத்திடம் இருந்து சிலையை பெற்று பாதுகாப்பாக வைக்கும்படி, கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோர்ட்டு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது.

    அதன்படி சிலையை கோர்ட்டுக்கு எடுத்து செல்ல சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் பழனிக்கு வந்தனர். பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ் சென்னை சென்றிருந்ததால் சிலையை போலீசாரிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் சிலையின் சக்தியை இழக்க வைக்க பூஜைகளும் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சிலையின் சக்தியை இழக்க வைக்கும் பூஜை மற்றும் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான பிரத்யேக ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்தனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில், கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் மலைக்கோவிலுக்கு வந்தனர்.

    பின்னர் ஐம்பொன் சிலையை, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பெட்டியில் வைத்து கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முன்னதாக சிலையின் எடை, உயரம் உள்ளிட்டவைகளை கோவில் அதிகாரிகள் அளவீடு செய்து விவரங்களை ஆவணங்களாக பதிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து ஐம்பொன் சிலை வைக்கப்பட்ட பெட்டியை, மலைக்கோவிலில் இருந்து அடிவாரத்துக்கு கோவில் அதிகாரிகள் கொண்டு வந்தனர். அதன் பின்பு கோவிலுக்கு சொந்தமான வாகனம் மூலம் ஐம்பொன் சிலை வைக்கப்பட்ட பெட்டி, இடும்பன் கோவில் பை-பாஸ் சாலை வழியாக பாலாறு இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிலை வைக்கப்பட்டு இருந்த பெட்டி ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் முன்னிலையில் பெட்டி திறக்கப்பட்டு ஐம்பொன் சிலை வெளியே எடுக்கப்பட்டது. தொடர்ந்து சிலையின் எடை மற்றும் உயரம் அளவீடு செய்யப்பட்டது. அதில் சிலையின் எடை 221 கிலோ 100 கிராமும், உயரம் 3¾ அடி (111.5 சென்டி மீட்டர்) இருப்பதும் தெரியவந்தது.

    இந்த விவரங்களை சிலையை கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணங்களில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பதிவு செய்தனர். அதன்பிறகு சிலை வைக்கப்பட்ட பெட்டியை, வேனில் ஏற்றி கும்பகோணத்துக்கு போலீசார் எடுத்துச்சென்றனர். பின்னர் அந்த சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

    பின்னர் அந்த சிலை கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோர்ட்டில் நீதிபதி அய்யப்பன் பிள்ளை முன்பு ஒப்படைக்கப்பட்டது. நீதிபதி முன்பு சிலையை மரப்பெட்டியில் இருந்து வெளியில் எடுத்து வைத்து சிலையை எடை போட்டனர். அந்த சிலையை கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனைத்தொடர்ந்து கும்பகோணம் கோர்ட்டுக்கு வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல், கோர்ட்டு நடவடிக்கைகளை பார்வையிட்ட பின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்திற்கு சென்றார். அங்கு சிலையை ஒப்படைத்த அவர், அந்த சிலை மீது எந்தவித குறிப்பும் எழுதக்கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து விட்டுச் சென்றார்.  #Idolsmuggling  #Tamilnews 
    ×